எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியம் வேண்டும்-வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேச்சு
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அறிவிப்பாளர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மதுரை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் மற்றும் வானொலி அறிவிப்பாளர்கள் ஜெயப்ரியா, நவநீதன் ஆகியோர் மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார்கள்.
அப்போது ஜெயப்ரியா மாணவர்களிடம் பேசுகையில், எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தைரியம் வேண்டும். அதற்கான வாய்ப்பாகவே வானொலி போன்ற நிகழ்ச்சிகளில் பேசி பயத்தை நீக்க வேண்டும்.
பொதுவாக மைக் பிடித்து பேசுவது பயத்தை நீக்கும் அடித்தளம் ஆகும். ஆகவே இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும். மனதில் இருக்கும் தைரியத்தை வெளிக்கொண்டு வந்தால் தான் தைரியமாக பேச முடியும்.
ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் எதற்கும் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும், நேர்மையாகவும், மனதில் பட்ட நல்ல விஷயங்களை மற்றவர்களிடம் எடுத்து கூறவேண்டும்.
கெட்டவர்களாக இருந்தால் அவர்களோடு சேரக்கூடாது. நல்ல விஷயங்களை வாழ்க்கையில் எப்பொழுதும் பின்பற்ற வேண்டும். எந்த நிலையிலும் படிப்பை விட்டு விடக்கூடாது.
மதுரை வானொலி நிலையத்திற்கு வந்து வானொலியில் பேசுவதற்கும், இங்கு பேசியதற்கும் நிறைய வித்தியாசங்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
நம் மனதிற்கு பட்ட நல்ல விஷயங்களை எல்லோரிடமும் சொல்ல வேண்டும். கெட்டது யார் செய்தாலும் அவர்களை விட்டு விலகி விடவேண்டும். இவ்வாறு பேசினார்..ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.