பட்ஜெட்டில் முதல்வர் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்:

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த திமுக தேர்தல் வாக்குறுதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என சொன்னார்.

திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட் என்பதால் இதிலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் தினமும் அரசுக்கு கோரிக்கை மனுவை தபால் அனுப்பி வருகின்றார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களை கற்று தருகின்றார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாய் உயர்த்தியதால் தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியம் பெறுகின்றனர்.

13 ஆண்டை கடந்து தற்போது 14வது ஆண்டில் இன்னும் தற்காலிகமாக பணிபுரிவதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

இதே பாடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களை போலவே பகுதிநேர ஆசிரியர்களை பணியில் அமர்த்தி காலமுறை சம்பளம் வழங்க நிதியை இப்பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்களிப்பில் இருந்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளம் வழங்க ஒரு ஆண்டின் 11 மாதங்களுக்கு 132 கோடி ஆகிறது.

மேலும் தமிழ்நாடு மாநில அரசு நிதியில் இருந்து உதவி தொகையாக வழங்குகின்ற ரூ. 2,500 சம்பள உயர்வுக்காக ஒரு ஆண்டின் 11 மாதங்களுக்கு 33 கோடி ஆகிறது.

இதனால் தற்போதைய 12,500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்க மொத்தம் 165 கோடி ஆகிறது.

இதனை சிறப்பாசிரியர் / இடைநிலை ஆசிரியர் நிலையில் காலமுறை சம்பளம் வழங்க அதற்குரிய அடிப்படை ஊதியம் ரூ.20600 ன்படி நிர்ணயித்தால் ஆண்டுக்கு 450 கோடி ஆகும்.

இதற்கு தற்போது தொகுப்பூதியத்திற்கு ஆகின்ற 165 கோடியைவிட, மேலும் 300 கோடி தேவைப்படும்.

எனவே முதல்வர் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்குகிற நிதியில் இருந்து 300 கோடி நிதியை பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைவார்கள்.

இதற்காக அரசு கொள்கை முடிவு எடுத்து 12 ஆயிரம் பேரை தமிழக அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும்.


எஸ்.செந்தில் குமார்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்
Cell : 9487257203

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *