தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா பாரதியார் நினைவு நூற்றாண்டு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் பயின்று வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 17 வயது மாணவி உட்பட 3 பேரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் மதன் குமார் மீதும், இப்பிரச்சினைகளை மூடி மறைக்க முயன்ற கல்லூரி முதல்வர் பேபி லதா மீதும், வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி, பாதுகாப்பளிக்கவேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க .தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், பாண்டியனார் மக்கள் இயக்கம் வழக்கறிஞர் சீனி ராஜ், ஐஎன்டியுசி. ராஜசேகரன், ஆல்வின் ராஜ், பகத்சிங் ரத்ததானக்கழகம் காளிதாஸ், லட்சுமணன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துக்குமார், ஜெகன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் செல்வத்துரை (எ) செல்வம், தமிழ் நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு அருள்தாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் அபிராமி P.முருகன், அன்பரசு, தொழிலாளர் விடுதலை முன்னணி கலைச்செல்வன், எச். எம்.எஸ். D.வினோபா, ஆவல் நத்தம் லட்சுமணன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மேரி ஷீலா, தொழிலதிபர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.