மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

குத்தாலத்தை அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில் 54 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு, பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா , கனடா, ரஷ்யா ஜெர்மனி கஜகஸ்தான் உள்ளிட்ட பத்து நாடுகளை சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில், தாருகாவனத்து சித்தர் பீடம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் அழித்து ஆடையாக உடுத்துக் கொண்டதாக வழுவூர் தலபுராணம் தெரிவிக்கின்றது. இத்தகைய சிறப்புடைய பெருஞ்சேரி கிராமத்தில் 54 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய சிவலிங்கம் வடிவ கோயிலும், அதில் உள்புறம் ஒரே கல்லால் செய்யப்பட்ட 5 அடி உயர சிவலிங்கம் தாருகா வனத்து சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பிராணப்பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. தாருகாவனத்து சித்தர் பீட நிறுவனத் தலைவர் கருணாகரன் முன்னிலையில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 30-ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, தொடர்ந்து
வாஸ்து சாந்தி பூஜைகள், வசுத்ததார, நவகிரக ஹோமங்கள் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கின. யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் பசு, யானை, குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல
மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, கூனம்பட்டி ஆதீன திருமடம் சற்குரு நடராஜசுவாமிகள் தலைமையில், வேதியர்கள் மந்திரம் ஒதி, 5 அடி உயர தாருகாவனேஸ்வரர்சிவலிங்க திருமேனியில் புனித நீர் ஊற்றி பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ரஷ்யாவில் இருந்து வருகை தந்துள்ள யுலியா என்ற பெண்மணி ஒருங்கிணைப்பில், கனடா, கஜகஸ்தான் லித்திவியா, ஜெர்மன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 40 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.