மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
தென்காசி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்பெற்றுக் கொண்டார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 07 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500/- வீதம் ரூ.94,500/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,500/- மதிப்பிலான நான்கு சக்கர நாற்காலி என மொத்தம் 1,08,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 534 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்புலெட்சுமி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.