நாகப்பட்டினம்,ஜூலை.28-
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திட்டச்சேரி பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் முன்னிலை வகித்தார்.
முன்னதாக இளநிலை உதவியாளர் சாமிநாதன் வரவேற்றார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரவீன் கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். கூட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம் 1986 இன் படி குழந்தை தொழிலாளர்கள் இல்லாத பேரூராட்சியாக மாற்றிட வேண்டும், குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்திட வேண்டும்,
குழந்தை திருமணங்கள் நடைபெறாத பேரூராட்சியாக மாற்ற வேண்டும், இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்திட வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், திட்டச்சேரி காவல்துறையினர் மற்றும் அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
