ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழவலசை கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஸ்ரீ காளியம்மன், ஶ்ரீஅய்யனார், ஶ்ரீகருப்பண்ணசாமி கோவில் வைகாசி பொங்கல் விழாவில் புரவி எடுப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.
கடந்த வாரம் இந்த திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது. அன்று முதல் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட ஏராளமானோர் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மாலை நேரத்தில், புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
இதில் களிமண்ணால் செய்யப்பட்ட நான்கு குதிரை சிலைகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீஅய்யனார், ஶ்ரீகருப்பண்ணசாமி, தவழும் பிள்ளை ஆகிய உருவ பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தாரை தப்பட்டை, ஜிப்லா மேளங்களுடன் பொதுமக்கள் சுவாமி உருவ பொம்மைகளை தலையில் சுமந்தபடி பேரையூரில், இருந்து கீழவலசை கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இந்த புரவி எடுப்பு ஊர்வலத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.பின்னர் இரவு அம்மன் சிலைக்கு கண் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வழிபட்டனர். பின்னர் நேற்று காலை அக்னிசட்டி, வேல்குத்துதல், மாவிளக்கு,போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பின்னர் விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை நேரத்தில் குதிரை சிலைகள் மற்றும் சுவாமி உருவ பொம்மைகளை ஊர்வலமாக சென்று மலட்டாறு அணைக்கட்டு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் அருகில் வைத்தனர். திருவிழாவை முன்னிட்டு இரவு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது