பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சா. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி நடத்தினார்.
இதில் மாவட்ட செயலாளர் ராமநாதன், ஒன்றியச் செயலாளர் நடராஜன், துணைச் செயலாளர் டி.கே. காத்தவராயன், நாகராஜன், கலியமூர்த்தி, அன்பழகன், ராஜாராமன், சபாபதி, வடிவேலு, முத்துராமன், இறைக்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோழர் நடராஜன் கூட்டத்தில் பல்வேறு அறிக்கையை முன்வைத்து பேசினார். பின்னர், அந்த அறிக்கை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
முக்கிய தீர்மானங்கள்:
இருளர் குடும்பங்களுக்கு நிலம்:
நல்லூர் ஊராட்சி பள்ளி பின்புறம் அமைந்துள்ள நாலே முக்கால் ஏக்கர் அரசுப்புறம்போக்கு நிலத்தை, இப்போது வசித்து வரும் இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை நிலமாக வழங்கக் கோரப்படுகிறது.
உடையார்பாளையம் காந்தி நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஏழை குடும்பங்களுக்கும் வீட்டு மனைகள் வழங்க வேண்டும்.
நடைபாதை பிரச்சனை தீர்வு:
முத்துசேர்வா மடம் ஊராட்சி சம்போடையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் நடந்து செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்திருப்பதை அகற்ற வேண்டும். அதற்காக நடைபாதை அமைக்க கோரப்படுகிறது.
காத்திருப்பு போராட்டம்:
மேற்படி கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஜூலை 15ஆம் தேதி உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்:
200 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
நாளாந்த சம்பளத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும்.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
ஜூன் 10ஆம் தேதி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
மருத்துவமனை கட்டிடத் திட்டம்:
உடையார்பாளையம் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4.5 கோடி நிதியில், அரசுநிலத்தில் புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும்.
அந்த நிதியை வேறு பகுதிக்கு மாற்றக் கூடாது என அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சார் பதிவாளர் அலுவலகம்:
தற்போது மேலக்குடியிருப்பில் தனியார் கட்டிடத்தில் இயங்கும் சார் பதிவாளர் அலுவலகத்தை பழைய நீதிமன்ற கட்டிடத்தில் மாற்ற வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும். அரசு வாடகை செலவையும் தவிர்க்கலாம்.
வாய்க்கால் மீட்பு மற்றும் சுற்றுலா மேம்பாடு:
கொள்ளிடம் பொன்னாற்று கால்வாயிலிருந்து பொன்னேரி வரை நீர் செல்லும் வாய்க்கால் பகுதிகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்றி கால்வாயை மீண்டும் வெட்டி நீர் வரத்தினை புதுப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் பொன்னேரிக்கு கிழக்கே உள்ள ஐயாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் மேலும், பொன்னேரி கரைகளை பலப்படுத்தி படகு சவாரி உட்பட சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். இது சுற்றுலாத் துறைக்கு வருமானத்தை அதிகரிக்க முடியும் கூட்டத்தின் இறுதியில், ஒன்றிய துணைச் செயலாளர் டி.கே. காத்தவராயன் நன்றி கூறி கூட்டத்தை முடித்தார்.