வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் அழகர் ஆற்றில் இறங்குவதற்காக மதுரை வந்தடைந்தது!-மலர் தூவி வரவேற்பு!!
மதுரை மாவட்டம் அழகர்மலை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக நேற்று மாலை கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரைமாநகர் நோக்கி புறப்படும் நிகழ்வு நடந்தது.
தொடர்ந்து இன்று கள்ளழகர் எதிர்சேவை நடைபெறுகிறது. இதனையடுத்து விழாவின் சிகர நிகழ்வாக 12 ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதற்காக வைகை அணையில் இருந்து வியாழனன்று மாலை முதல் 12 ம் தேதி வரை வினாடிக்கு ஆயிரம் கன அடி நீரானது திறந்து விடப்பட்டதையடுத்து கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான மதுரை ஆழ்வார்புரம் பகுதிக்கு வைகை நதி நீர் வந்தடைந்தது.
இதனை வரவேற்கும் விதமாக வைகை நதி மக்கள் இயக்கத்தின் சார்பில் மீனாட்சி அம்மன் மற்றும் கருப்பசாமி கள்ளழகர் வேடமிட்ட சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் பூக்களை தூவி வைகை நதி நீரினை வரவேற்றனர்.
அப்போது சிறப்பு பூஜை கள் செய்து வைகை நதி நீரை வரவேற்ற சிறுவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வைகை நதியை பாதுகாக்க வேண்டும் என முழக்கமிட்டபடி வரவேற்றனர். கையில் கிளியுடன் மீனாட்சிஅம்மன்போன்று வேடம்அணிந்தசிறுமியும் கையில் அரிவாளுடன் கருப்பசாமி வேடமிட்ட சிறுவனும் கள்ளழகர் வேடமிட்ட முதியவரும் ஒரு சேர வைகையாற்றில் நின்றபடி வைகை நதி நீரினை வரவேற்றதை அங்கு கூடியிருந்த பொது மக்கள் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.