எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ தேர் திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர்சுவாமி கோவில் உள்ளது.நவகிரகங்களில் செவ்வாய் தலமாகவும், முருக பெருமான் செல்வ முத்துக்குமார சுவாமியாக தனி சன்னிதியிலும், அருள்பாளிக்கின்றனர்.
இக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா கடந்த 2 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் 7ம் திருநாளான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர்,சுவாமி -அம்பாள், செல்வமுத்துக குமாரசுவாமி, அங்காரகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நான்கு திருத்தேரில் பஞ்ச மூர்த்திசுவாமிகள் எழுந்தருள சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், வர்த்தக சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை இழுத்தனர்.
தொடர்ந்து நான்கு தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு வீதிகளின் வழியாக சென்று மாலை கோயில் நிலையை அடைந்தது. விழாவை முன்னிட்டு நான்கு வீதிகளிலும் பேரூராட்சி சார்பில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் ரெத்தினவேல் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். நான்கு வீதிகளிலும் திருத்தேர் விழாவை முன்னிட்டு உடனுக்குடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விநியோகம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது