நாகப்பட்டினம் : ஜூன்- 17, தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்க அரசு சார்பில் ரூ.76 கோடியே 47 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கப்பட உள்ள இடத்தில் மா மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதால் அப்பகுதி கிராம மக்கள் நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேளாங்கண்ணி புறவழிச்சாலை அமைய உள்ள இடத்தில் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த நிலம் எடுப்பு தனி தாசில்தார் அமுதா, வருவாய் துறையினர், நெடுஞ்சாலை துறையினர், மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் சாலை அமைந்தால் தெற்குப்பொய்கை நல்லூர் உள்ளூர் கிராம மக்களுக்கு சொந்தமான 400 காய்ப்புள்ள மா மரங்கள், 80 தென்னை மரங்கள், 40 பனை மரங்கள், 20 வீடுகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. விவசாய நிலங்களை அழித்து வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் அகல புறவழிச்சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என கிராம மக்களிடம் தெரிவித்ததன் அடிப்படையில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
