கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியானது ஜூலை 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்தான லோகா வெளியிட்டு நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் கொடிசியா அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று லோகோவை வெளியிட்டனர்.
இந்தப் புத்தக கண்காட்சியில் 280- க்கு மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும்,விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தக கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இலக்கியம் சார்ந்த சாதனை படித்துள்ள சான்றோர்களுக்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருதும்,ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசும்,பாராட்டும் மடலும் வழங்கப்பட உள்ளது.
மேலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இது குறித்து எடுத்துரைக்கும் விதமாக குறும்பட போட்டி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர்கள் லிங்கசாமி மற்றும் சரண் ஆகியோர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் மூன்று குறும்படங்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் எழுத்தாளர்கள் படைப்புகளை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூன் 15ஆம் தேதி என்றும் குறும்பட போட்டிக்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டி அளித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட புத்தக கண்காட்சியை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளதாகவும் இந்த முறை ஒரு லட்சம் பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இளம் படைப்பாளர்களுக்கான பயிற்சிகளும் விருதுகளும் அளிக்கப்பட உள்ளதாகவும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். அரசு பள்ளி மாணவர்கள் இந்த புத்தக கண்காட்சிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் பொது மக்களுக்கான சிறப்பு பேருந்துகள் பற்றி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.