பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள மாதாபுரம் கிராமத்தில், புனித லூதர் அன்னை ஆலய வளாகத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த நிகழ்வில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட துடிப்பு மிக்க ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. இக்காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட தைரியசாலி மாடுபிடி வீரர்கள் திறமையை துணிச்சலுடன் வெளிப்படுத்தினர்.
விழா குழுவினர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், டிரெஸ்ஸிங் டேபிள், பீரோ, சைக்கிள், தங்க நாணயம், ஐபோன் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி, மாடுபிடி வீரர்களின் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.
நிகழ்வு முழுவதும் அரசு விதிமுறைகளுக்கு இணங்கவே நடைபெற்றது. விழாவில், மருத்துவ குழு, தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழு, 100க்கும் மேற்பட்ட போலீசார் ஆகியோர் பங்கேற்று பாதுகாப்பு மற்றும் அவசரகால சேவைகளை உறுதி செய்தனர்.
இவ்விழாவை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அவர்கள் சிறப்பாக துவக்கி வைத்தார். மேலும், கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மாடுபிடி வீரர்களின் தைரியம் மற்றும் தேசியக் கலாசார பங்களிப்பை மதித்து, அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவேண்டும் என விழா குழுவினர் வலியுறுத்தினர். இது போன்ற முயற்சிகள், பாரம்பரிய விழாக்களுக்கு அங்கீகாரம் அளிப்பதோடு, இளைஞர்களுக்கான ஊக்கத்தையும் ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர்