கோவை –
வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சூரையாடிய சூரைக்காற்று..!
சாய்ந்து இருப்பது வாழை மரங்கள் மட்டுமல்ல – வாழை விவசாயிகளின் வாழ்வாதாரமும் – பத்து ஏக்கரில் காற்றுக்கு முறிந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு தர வலியுறுத்தல்..!
கோவை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக அடை மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், அவ்வப் போது மழை விடும் நேரங்களில் ஆளை தூக்கும் அளவுக்கு சூறைக்காற்று வீசுகிறது. தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பனூர் பகுதியில் வீசிய காற்றுக்கு அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள் சாய்ந்தன.
இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணை தலைவர் பெரியசாமி,
கோவை, தொண்டாமுத்தூர் அருகே குப்பனூர் என்ற பகுதியில் மழை பொழிந்து விட்ட நிலையில், திடீரென சூறைக்காற்று வீசியது. அப்போது குப்பனூர் பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள், அறுவடைக்கு தயாரான நிலையில் முறிந்து விழுந்ததால், 20 லட்சம் வரை நட்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் குமுறி இருக்கின்றனர்.
கடன் பட்டு விவசாயம் செய்து வந்த நிலையில், தற்பொழுது அறுவடைக்கு தயாரான நேரத்தில் சூரை காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்ததால், வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவது என வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். வாழையில் ஏற்பட்ட நட்டத்திற்கு ஈடாக உரிய இழப்பீடு தர வேண்டும். மழைக் காலங்களில் வாழை மரங்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு, தற்பொழுது தமிழ்நாடு அரசாங்கம் தரும் இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை. நட்டத்தை ஈடு செய்யும் வகையில் இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசாங்கம் சிறப்பு குழு ஒன்றை இதற்காக அமைத்து, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை மற்றும் காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய விளை பயிர்களுக்கென உரிய இழப்பீடு தருவதற்கு, போர்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருக்கின்றார்.