வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் சித்திரை மாதம் செடில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வாண்டு கடந்த 20- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டும் விழாவுடன் தொடங்கியது.
24- ஆம் தேதி வியாழக்கிழமை முதல் தினசரி அம்மன் வீதியுலா காட்சியும் நடைபெற்று, நேற்று 27- ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை ஆலயத்தில் அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்கள், பொதுமக்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை பால் காவடி, பால் குடம், பாடைக் காவடி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மாலை 3- மணிக்கு அம்மன் அன்ன பட்சி வாகனத்தில் வீதியுலா காட்சியும் நடைபெற்று ஆலயம் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து செடில் சுற்றும் நிகழ்ச்சி வானவேடிக்கையுடன் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இரவு 8- மணிக்கு ஆர்க்கெஸ்ட்ரா இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 28- ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 3- மணிக்கு மஞ்சள் நீராட்டு விளையாட்டுடன் வீதியுலா காட்சியும், இரவு 8- மணிக்கு அரிச்சந்திரா மயான காண்டம் புராண நாடகமும், நாளை 29- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வருகின்ற மே3- ஆம் தேதி சனிக்கிழமை வரை இரவு 9- மணிக்கு பெரிய திரையில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
வரும் 4- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மங்கள வாத்திய இசையுடன் விடையாற்றி விழாவும், இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா காட்சியும் நடைப்பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சந்திரசேகரபுரம் D. ஸ்ரீராம் அய்யர் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமவாசிகள், உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.