தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு, கட்டாயப்படுத்தும் நிலையில் மத்திய இரயில்வே துறையும் வடநாட்டு கோயில் அமைப்புடன் இரயில் நிலைய முகப்பில் புதிய கட்டுமானம் காட்டியிருப்பதை கண்டித்தும், முன்பிருந்தவாறு தஞ்சை பெரிய கோவில் அமைப்பைக் கட்ட வலியுறுத்தி உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். வழக்கறிஞர்கள் கோ.அன்பரசன், வெ.ஜீவகுமார், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகரச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், முள்ளிவாய்க்கால் இலக்கியமுற்ற நிர்வாகி துரை.குபேந்திரன், மூத்த பொறியாளர் ஜோ.கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தஞ்சாவூர் இரயில் நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரயில்வே நிலையம் முகப்பில் ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைக்கப் பட்டிருந்தது. தற்போது சீரமைப்பு பணிகளில் உலகப் பிரசித்திபெற்ற பெரிய கோவிலை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வடநாட்டு கோவில் அமைப்பின் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு மக்கள் இயக்கங்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்தும், சமீபத்தில் தஞ்சைக்கு வந்த ஒன்றிய இரயில்வே துறை அமைச்சரை மக்கள் இயக்க பிரதிநிதிகள் சந்தித்து பெரிய கோவில் எடுக்கப்பட்டது தொடர்பாக சுட்டி காட்டியுள்ளனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதான உரிமைகளை பறித்து வரும் நிலையில், பெரிய கோயில் வடிவமைப்பு எடுக்கப்பட்டது

என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டுக்கு எதிரான சனாதான தாக்குதலாகவே உள்ளது. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், கட்டிடக்கலை, ஜனநாயக அமைப்பு முறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற பெரிய கோவில் வடிவமைப்பை மீண்டும் இரயில்வே நிலையம் முகப்பில் வைக்க வேண்டும், வடநாட்டில் உள்ளது போன்ற கோயில் அமைப்பை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், சி.பி.எம்.எல்.மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் இரா.அருணாச்சலம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் முனைவர் ஜீவானந்தம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் டி.தாமரைச்செல்வன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு.தியாகராஜன், ஆதித்தமிழர் பேரவை மூத்த தலைவர் எம்.பி நாத்திகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரெ.முகிலன், மக.இக தஞ்சை மாநகர செயலாளர் சாம்பான், விளிம்பு நிலை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயச்சந்திரன், இரயில்வே நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஏ.ஜெயராஜ், த.ஜோசப், த.தாமஸ், லட்சுமணன், கே.மலைச்சாமி, நா.சாமிநாதன், பாரதி புத்தக நிலைய நிர்வாகி கோதண்டபாணி, இரா.செந்தில்நாதன், சமூக ஆர்வலர்கள் தேவா, எஸ்.அபுசாலிக், எம்.சுப்பராயன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *