திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மதுரையில் உள்ள நூலகத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரும் திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயரும் கோவையில் உள்ள நூலகத்திற்கு பெரியார் பெயரும் சூட்டப்படும். நூலக கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.” என்றார்.

திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அமைந்திடும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் ரூ. 235 கோடி மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும்
இ-புத்தகங்கள் ரூ. 50 கோடி மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் ரூ. 5 கோடி மதிப்பீட்டிலும், என மொத்தம் ரூ. 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

திருச்சி நூலகத்தின் சிறப்பு அம்சங்கள்:

இந்நூலகத்தின் தரைத் தளத்தில் – வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்;

முதல் தளத்தில் – அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி;

இரண்டாம் தளத்தில் – கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்;

மூன்றாம் தளத்தில் – தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம் – படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி;

நான்காம் தளத்தில் – ரோபாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி;

ஐந்தாம் தளத்தில் – அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி;

ஆறாம் தளத்தில் – நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம்;

ஏழாம் தளத்தில் – காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம். தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *