தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டப்பட்டது.
விழாவில் ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில்,
அம்மாதான் உங்களின் முதல் ஆசிரியர். ஆசிரியர் தான் உங்களின் அடுத்த அம்மா என்ற வரிக்கு ஏற்ப ஆசிரியர்கள் மாணவர்களை அழகாகவும் நல்ல முறையிலும் இப்பள்ளியில் வளர்க்கிறார்கள்.
தமிழ் பாடல்கள் கூறும்பொழுது தமிழ் உச்சரிப்பும் நல்ல ஆரோக்கியமும் பெற முடியும். 1882ஆம் ஆண்டு பஞ்சாலையில் வேலை செய்த பெண்கள் தங்களுக்கு ஆண்களுக்கு சமமான ஊதியம் தர வேண்டும் என போராடி அதில் சுமார் 75 பெண்கள் தீயில் கருகி இறந்து விட்டனர்.
அவர்களின் நினைவாகவே மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1920ல் தீர்மானம் ஏற்றப்பட்டு 1975-ல் அமல்படுத்தப்பட்டது. 150 ஆண்டுகளுக்கு முன்னரே ஆண்களுக்கு சமமான ஊதியம் வேண்டுமென இப்போராட்டம் நடைபெற்றது.
பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்க்கவேண்டும். சிவகங்கையை ஆண்ட வீர மங்கை வேலு நாச்சியாரின் கதைகளையும் வீரதீரச் செயல்களையும் கூறி வளர்க்க வேண்டும்.
மேலும் இரக்ககுணம் இருக்க வேண்டும். அதற்கு உதாரணமாக அன்னை தெரசாவை சொல்லலாம். அன்னை தெரசாவின் வாழ்வில் நடந்த செயலையும் அதன் விளைவாக பணக்காரரின் மன மாற்றத்தால் கிடைத்த பெரும் தொகையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் பெண்கள் குழந்தைகளுக்கு நல்ல அறிவையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ற புத்தி தெளிவையும் பெற கற்று கொடுக்க வேண்டும். அதற்கு சான்றாக பல இதிகாச பெண்கள் இருந்து இருக்கிறார்கள்.
மகளிர் தினமானது பெண்களுக்கான உரிமையை பெற்றுக் கொள்வதை தவிர அத்துமீறல் கிடையாது.
பெண் குழந்தைகளுக்கு வீரம் வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியார் கதைகளை கூறி வீரமாக வளர்க்க வேண்டும். பெண்குழந்தைகளுக்கு வீரம் அவசியம்.
பெண் குழந்தைகளுக்கு கருணையை கற்றுக்கொடுங்கள். மாணவிகளுக்கு அறிவு தெளிவு வேண்டும். எந்த ஒரு செயலை செய்தாலும் தெளிவாக யோசித்து புத்திக்கூர்மையுடன் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்
மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கவிதை கூறுதல்,பேச்சு போட்டி,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற நந்தனா, ரித்திகா, கனிஷ்கா, முகல்யா ஆகியோருக்கும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற தர்ஷினி, சர்வேஸ்வரன் ஆகியோருக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் சார் ஆட்சியரின் அலுவலக தட்டச்சர் அன்பரசன் உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.