வரவிருக்கும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு, “தாய் மண்ணே வணக்கம்” என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், கோவையைச் சேர்ந்த நுண்கலைஞர் யு.எம்.டி. ராஜா செம்மண்ணைக் கொண்டு ஒரு அரிய ஓவியச் சிற்பத்தைப் படைத்துள்ளார்.
பேனா, பென்சில், பிரஷ் போன்ற எந்தவொரு பாரம்பரிய ஓவியக் கருவிகளையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க செம்மண் கலையைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தில், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுப்பிரமணிய பாரதியார், சுவாமி விவேகானந்தர், பகத் சிங் போன்ற தேசத் தலைவர்களின் உருவங்களும், இந்திய வரைபடமும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. மேலும், தலை தலைமைச் செயலகத்தில் முதன்முறையாகக் கொடியேற்றுவதைக் குறிக்கும் விதமாகவும், தேசத் தலைவர்களை இருகரம் கூப்பி வணங்குவது போன்ற காட்சியமைப்பும் இதில் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த கலைஞர் யு.எம்.டி. ராஜா, சுமார் நான்கு நாட்கள் தொடர் முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஓவியச் சிற்பத்தை வரைந்து முடித்துள்ளார். சுதந்திர தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடும் விதமாகவும், தேசத் தலைவர்களைப் போற்றும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செம்மண் கலைப்படைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
