காங்கயம்,
இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி காங்கயம் தனி வட்டாட்சியரிடம் உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
உடுமலை பகுதியிலுள்ள தும்பலப்பட்டி, வெங்கிட்ட புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 70 பட்டியலின குடும்பங்களுக்கு சொந்த வீடு, நிலம் இல்லை. இது குறித்து இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, உடுமலை வட்டாட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்து இருந்தனர். இதுவரை பட்டா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி 70 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, காங்கயத்தில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியரிடம் ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட தனி வட்டாட்சியர் கோபால், இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியில், திராவிட தமிழர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தங்கவேல், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தெற்கு மாவட்ட செயலாளர் ரங்கநாதன் மற்றும் உடுமலை பகுதியைச் சேர்ந்த மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.
