சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா சாதனை நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஸ்ரீ ருத்ரா, கடினமான யோகாசனத்தைச் செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளார்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் – சுகுணா ராணி தம்பதியினரின் மகள் ஸ்ரீ ருத்ரா,விவேகம் சி.பி.எஸ்.இ.பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்..

சிறு வயது முதலே யோகாவில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ரீ ருத்ரா
சரவணம்பட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு சாதனை நிகழ்வில், யோகாவில் மிகவும் சவாலானதாகக் கருதப்படும் ‘சதுஷ்கோணாசனா’ எனும் ஆசனத்தை, மற்ற 60 பேருடன் இணைந்து தொடர்ந்து 23 நிமிடங்கள் இடைவிடாது செய்து அசத்தினார்.

இளம் வயதிலேயே ஸ்ரீ ருத்ரா காட்டிய இந்த அபாரமான மன உறுதியும், உடல் வலிமையும் ‘சோழன் உலக சாதனை’ (Cholan Book of World Records) புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்குப் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன் மற்றும் கணினித் திரைகளில் மூழ்கியிருக்கும் நிலையில், ஸ்ரீ ருத்ரா போன்ற சிறுமிகளின் இந்தச் சாதனை மற்ற குழந்தைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

சிறுமியின் இந்த முயற்சிக்குத் துணையாக இருந்த அவரது பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் பெருகி வருகின்றன.