கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த 4வது வார்டு திமுக கிளைச் செயலாளர் சபரி ராஜன்.. இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இருவருக்கும் தனித் தனி மின் இணைப்பு இருந்த நிலையில் அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.
இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தை விட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மாதம் ரூ.8000 மின் கட்டணம் வந்துள்ளதாகவும், வழக்கமாக ரூ.1000 முதல் 1500 வரை பின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8000 வந்து இருப்பதாகவும், தனது மகள் வெளியூர் சென்றுள்ள நிலையில்.. மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதாகவும் , வழக்கம்போல இரு மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலமாக தேவையான ஆவணங்கள் அளித்திருப்பதாகவும், அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும்,, டீக்கடை நடத்துவரும் தன்னால் ரூ.8000 மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறி தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியதும் சபரி ராஜன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
