திருவொற்றியூர் ஜெய்காகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஐ.டி.சி., இந்தியா என்.ஜி.ஓ., சார்பில், ஆறு கழிப்பறைகள், ஏழு சிறுநீர் கழிப்பகம், ஒரு உடைமாற்றும் அறை, நாப்கின் கருவி, மழைநீர் சேகரிப்பு தொட்டி.கைகழுவும் குழாய்கள் உள்ளிட்டவை, 22 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழாவில், திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சங்கர் பங்கேற்று திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.பின், பொதுத்தேர்வு மாணவர்களிடம் பேசியபோது, அழியாத செல்வம் கல்வி. தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்கான, முயற்சிகளை ஆசிரியர்கள், மாணவ – மாணவியர்கள் எடுக்க வேண்டும்.
இதற்கு முன்பாகவும், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு, ஆய்வகம், கட்டட வசதிகள், மாலை நேர வகுப்புக்கான சிற்றுண்டி உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.தற்போது, முதல் மதிப்பெண் பெற்ற இருவருக்கு, கல்லுாரி கட்டணத்துடன் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில், 50 பேர் முதல் மதிப்பெண் பெற்றாலும், கல்லுாரி கட்டணத்தை ஏற்பேன் என பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை வெற்றிச் செல்வி, ஐ.டி.சி.,யின் தேவராஜ், சுகந்தன், இந்தியா என்.ஜி.ஓ., வின், கிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.