பா. வடிவேல், அரியலூர்
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய விழா அரங்க மேடையை நிர்மாணித்து வழங்கியுள்ளது. இந்த மேடை, பள்ளி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இது தொடர்பான திறப்பு விழா, அரியலூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஏழிலரசி தலைமையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செட்டிநாடு சிமெண்ட் ஆலைத் தலைவர் ஆர்பி.முத்தையா, மேடையை திறந்து வைத்து பள்ளிக்குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசினார்.
விழாவில் நிறுவனத்தின் முக்கிய அலுவலர்கள் — பொது மேலாளர் (கணக்குகள்) பி.எல். முத்துக்கருப்பன், இணை பொது மேலாளர் (சுரங்கம்) ஆர்.ரவிக்குமார், துணை பொது மேலாளர் (மனிதவளம்) டி.சச்சிதானந்தம், மக்கள் தொடர்பு அலுவலர் எம். ராஜாசிதம்பரம், பள்ளித் தலைமை ஆசிரியர் மு.ஜெயந்தி, ஆசிரியர்கள், அலைய அலுவலர்கள், கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ‘செட்டிநாடு சிமெண்ட் ஈகோ கிளப்’ சார்பில் அதன் தலைவர் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் துணை பொது மேலாளர் வி.ரமேஷ் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள், மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, பள்ளி வளாகத்தில் சுமார் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சி நிறைவில், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி மொழியை ஆர்பி.முத்தையா வாசித்து, அனைத்து பங்கேற்பாளர்களும் அதை ஏற்று கடைபிடிக்க உறுதியளித்தனர்.