திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “நாமும் சுற்றுச்சூழலும்” விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. வந்தவாசி பாலாம்பாள் ஐடிஐ வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் இராமலிங்கம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா, தரணி கார்டன் நிர்வாகி தரணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐடிஐ முதல்வர் என்.எஸ்.குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, நகராட்சி மேனேஜர் எம்.ரவி (நகராட்சி ஆணையர், பொறுப்பு) பங்கேற்று, உலகச் சுற்றுச்சூழல் தினத்தை பற்றிய விழிப்புணர்வு தகவல்களை விளக்கினார். மேலும் நெகிழி பயன்பாடுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், மரங்களை நட்டு சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாப்பதில் மாணவர்களுக்கு அதிகம் பங்கு உண்டு என்று வலியுறுத்தினார். காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு பற்றி விளக்கினார். சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு 101 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. நகராட்சி அலுவலர் பிச்சாண்டி, தொழிற்பயிற்சி நிர்வாகி சந்திரசேகரன், ஆசிரியர்கள் சிவராமகிருஷ்ணன், தாமோதரன், அரிதாசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.