காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி, ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் முத்துபெருமாள் (47). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முத்துபெருமாள், அவரது மனைவி ஆகிய இருவரும் சென்னை சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள், உடைக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 150 சவரன் தங்க நகைகள், 1.5 கோடி ரொக்க பணம் உள்ளிடவைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து பெருமாள் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த, ஸ்ரீபெரும்புதூர் போலீசார், வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் மூலம் சேகரித்தனர். தொடர்ந்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் இருவர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவதும், பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதும் அதில் பதிவாகியுள்ளது.
அதனை அடிப்படையாகக் கொண்டு தப்பிச்சென்ற கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். பட்டபகலில் முகமூடி கொள்ளையர்களின் துணிகரத்தால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *