மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓதவந்தான்குடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளர்களும் நிறைந்த இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குறிப்பாக ஓதவந்தான்குடி,திருநீலகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் அழுத்தம் குறைவு காரணமாக போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்துள்ளனர்.
அதுவும் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் அதனை சிறிது சிறிதாக சேகரித்து தங்கள் அன்றாட குடிநீர் தேவையை போக்கி வருகின்றனர். மேலும் அடுத்த கிராமங்களுக்கு சென்று இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்களில் குடிநீர் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இதுவரை நீர் ஏற்றும் பிரதான குழாய் இணைக்கப்படாமல் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் பயனற்று கிடக்கிறது.
எனவே தங்கள் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு பிரதான இணைப்பு வழங்கவும் உடனடியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்துக் கொடுக்கவும் ஓதவந்தான்குடி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.