காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி குமார பிள்ளை தெருவில், “இந்திய சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், வளர்ச்சி” என்ற ஹீடு இந்தியா அறக்கட்டளை சார்பில் “காரைக்கால் முதியோர் இல்லம்” என்ற பெயரில் ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட, கைவிடப்பட்ட இலக்கு மக்களுக்கான மூத்த குடிமக்கள் காப்பகம் திறக்கப்பட்டது.
குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பி. ஆர். என். திருமுருகன் அவர்கள், இல்லத்தை திறந்து வைத்து அங்கு தங்கி இருந்த ஆதரவற்ற முதியவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் செய்திருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியையும் பார்வையிட்டார். பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் நிகழ்த்திய இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்று பாராட்டு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த அறக்கட்டளை சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு பணியாற்றும் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு அமைச்சர் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
அதில் முதலில், புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இணைப் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் எஸ். அனந்த்குமார் அவர்கள் மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவியர் நலனுக்கான செய்த சேவைகளை பாராட்டி அமைச்சர் திருமுருகன் அவர்கள் விருது வழங்கி கவுரவித்தார்.
அதைத் தொடர்ந்து, அன்னை ஆம்புலன்ஸ் பாபு கோபாலகிருஷ்ணன், உதவும் கரங்கள் எம். மோகன், போராளி இயக்கத்தின் பி. பார்த்திபன், மேலும் பாராட்டத்தக்க சேவைகள் செய்த டாக்டர் எம். மகாதேவன், ராஜேஸ்வரி, அப்துல் ரஹீம், டேனியல் உள்ளிட்ட பலருக்கும் அமைச்சர் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் காரைக்கால் சமூக நலத்துறையின் மக்கள் நல அலுவலர் கே. சுந்தரம் மற்றும் மருத்துவர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக, அந்த தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் வீ. தீபா ராஜா வரவேற்புரை வழங்கினார் நிகழ்ச்சியின் இறுதியில், அறக்கட்டளையின் நிறுவனர் ராஜா அனைவருக்கும் நன்றி உரைத்தார்.