வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் புஷ்பப் பல்லக்கு விழா கோலாகலம், ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலைசிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடைக் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா கடந்த 7- ஆம் தேதி பூச்செறிதல் விழா உடன் தொடங்கியது. கடந்த 9- ஆம் தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 16- ஆம் தேதி இரண்டாம் காப்பு கட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அன்று முதல் தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தினசரி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான கடந்த 23-ஆம் தேதி பாடைக் காவடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் புஷ்ப பல்லக்கு விழாவையொட்டி முதல் நாள் சனிக்கிழமை இரவு முதல் பக்தர்கள் பாடைக்காவடி, பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேகஆராதனைகள் நடைபெற்றன. இரவு 10 மணி அளவில் அம்மன் 30 அடி நீளம் கொண்ட புஷ்ப பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெற்றது. அது சமயம் தமிழகத்தில் தலை சிறந்த நாதஸ்வர, தவில் வித்வான்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி உடன் விடிய விடிய வீதி உலா காட்சி நடைபெற்றது.

நேற்று அதிகாலை புஷ்ப பல்லக்கு ஆலயத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கு வலங்கைமான் போலீஸ் சரக இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் 300 ஆண், பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆலங்குடி வட்டார சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் செய்யப்பட்டிருந்தது. வலங்கைமான் பேரூராட்சி சார்பில் தூய்மை பணிகளும், குடிநீர், தெருமின்விளக்கு வசதிகள், சாலையில் வெப்பத்தை குறைக்க தண்ணீர் தெளித்தலும் சிறப்பான முறையில் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாக அமைந்திருந்தது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், பாபநாசம்,குடவாசல், மன்னார்குடி பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, ஆலய அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், மண்டகப்படி தாரர்கள், வரதராஜன்பேட்டை தெருவாசிகள் நல சங்கத்தினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *