எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் திருத்தேர் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களும் ஒன்றான வண்புருஷோத்தமன் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இந்த ஸ்தலத்தில் வியாக்ரபாதர் மகன் உபமணியும் தாய்ப்பால் நினைத்து அழ பெருமாள் திருப்பாற்கடலை உண்டு பண்ணி பாலமுது ஊட்டியதாக ஐதீகம்.
இங்கு வந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு பசிப்பிணி நீங்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க வண்புருஷோத்தமன் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், வீதி உலாவும் நடைபெற்றது.
இன்று முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.தேரடியிலிருந்து திருத்தேரில் பெருமாள் தாயர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என நாமம் சொல்லி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேர் நான்கு வீதிகளில் வலம் வர வீடுகள் தோறும் பூ சர்க்கரை பழம் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் நிலையை அடையும்.தேர்திருவிழாவில் உள்ளுர் மற்றும் வெளி ஊர்களிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.திருவெண்காடு போலீசார், தீயணைப்பு வாகனத்துடன் பூம்புகார் தீயணைப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.