கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களை வரவேற்கும் விதமாக நெகிழ்ச்சியான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இன்று காலை பள்ளி தொடங்கியதும், நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளைப் பள்ளி நிர்வாகம் அன்போடு வரவேற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம்குமார் தலைமையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் அனைவரும் நுழைவாயிலில் திரண்டு நின்றனர். பள்ளிக்குள் நுழைந்த மாணவர்களின் மீது மலர் தூவியும், பாரம்பரிய முறைப்படி ஆராத்தி எடுத்தும் விலையில்லா சீருடைகள், நோட்டு, புத்தகம் வழங்கினார்.
மேலும்
”மாணவர்கள் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் பள்ளிக்கு வர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். என்று ஆசிரியர்கள் மாணவர்களிடம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஆசிரியர்களின் இந்த அன்பான மற்றும் வித்தியாசமான வரவேற்பால் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
புதிய வகுப்பறைக்குச் செல்லும் பயமோ, தயக்கமோ இன்றி, ஒரு திருவிழா போன்ற சுழலில் மாணவர்கள் இன்று தங்களது புதிய கல்வியாண்டை உற்சாகமாகத் தொடங்கினர். பள்ளி நிர்வாகத்தின் இந்த நெகிழ்ச்சியான செயல் இப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
