கேரளாவில் 18 மாதமே ஆன பிஞ்சு குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளதுடன், பார்ப்பவர் நெஞ்சங்களை கலங்கச் செய்துள்ளது. இந்த துயரச் செய்தி கேட்டு மனமுடைந்த கோவையைச் சேர்ந்த பிரபல மினியேச்சர் கலைஞர் U.M.T.ராஜா, அந்த குழந்தைக்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் தனது கலைத்திறன் மூலம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பால் குடி கூட இன்னும் மறக்காத அந்தப் பிஞ்சு குழந்தையின் நினைவாக, ஒரு கண்ணாடி பால் புட்டியை (Feeding Bottle) எடுத்துக்கொண்டு, அதன் உள்பகுதியில் அந்த குழந்தையின் உருவத்தை தத்ரூபமாக ஓவியமாக வரைந்துள்ளார். மேலும், அந்த புட்டிக்குள் ஒரு சிறிய தீபத்தை ஏற்றி வைத்ததோடு, “இனி நீ தெய்வக் குழந்தை” என்ற நெஞ்சை உருக்கும் வாக்கியத்தையும் எழுதியுள்ளார். அந்தப் பிஞ்சு குழந்தையின் மரணத்திற்கு ஒட்டுமொத்த மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த உருக்கமான மினியேச்சர் அஞ்சலி, காண்போரின் கண்களைக் குளமாக்குவதோடு சமூக வலைத்தளங்களிலும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
