நாகப்பட்டினம்,ஜூன்.3-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி பிள்ளை பனங்குடி கிராமத்தில் முத்து மாரியம்மன், வீரமா காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்பிகா சமேத ராஜராஜேஸ்வர சுவாமிகோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், மாவிளக்கு போடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து சக்தி கரகம், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அழகு காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு பால், தயிர்,பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிள்ளை பனங்குடி கிராமவாசிகள் செய்திருந்தனர்.
