தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்களது படகுகளைச் சிறைபிடிப்பதும், மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும், இதற்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையால் நடைபெற்றது.
பல்வேறு மீனவர் அமைப்புகளைச் சார்ந்தவர்களை கனிமொழி கருணாநிதி எம்.பி சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அதற்கு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் இராமநாதபுரம் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து, தமிழ்நாட்டு மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவும், ஒன்றிய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரவும் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை மனுவை வழங்கினார்.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.