கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா, வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழா, கிரகணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இலக்கிய மன்ற மற்றும் சிறார் திரைப்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.

கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஐம்பெரும் விழாவில் பேசும்பொழுது
இந்தியா 1962 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஒரு தத்துவஞானி மற்றும் ஒரு சிறந்த ஆசிரியரின் பிறந்தநாளையும், இந்திய கல்வி முறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூறுகிறது.

வ.உ.சி.பிறந்தநாள்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சுதேசி கொள்கையில் உறுதியாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய ஊக்கமாக இருந்த அவரின் வாழ்க்கைப் பயணத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

அதன்படி, 1906 ம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் சுதேசி நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் பல பேரிடம் பங்குகளை வாங்கி ரஷ்யாவிலிருந்து எஸ்.எஸ். காலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற இரு கப்பல்களை வாங்கி அதை தூத்துக்குடிலிருந்து கொழும்புவிற்கு விட்டார்.

ஆங்கிலேய வர்த்தகத்தை நலிவடைய செய்வதற்காக ‘சுதேசி பண்டக சாலை எனும் இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பை வ.உ.சி. உருவாக்கினார்.1972-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின்போது அவர் பெயரில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

அஞ்சல் தலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார். வ.உ.சி.-யின் வாழ்க்கை வரலாறு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளியானது என்றும் செப்டம்பர் 7 மற்றும் 8 தேதி முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுகிறது அனைவரும் வானில் வெறும் கண்ணோடு கிரகணத்தை கண்டு களிக்கலாம் என்றும் பேசினார்.

வட்டார அளவில் நடைபெற்ற மன்ற போட்டியில் சிறார் திரைப்பட போட்டி ஒளிப்பதிவு பிரிவில் துர்க்கா ஸ்ரீ மூன்றாம் இடமும், நடிப்பு பிரிவில் ரிதன்யா மாறன் முதலிடமும், கதை மற்றும் வசனம் எழுதுதலில் ரிதன்யா மாறன் முதலிடமும், ஆங்கிலம் கதை சொல்லுதல் போட்டியில் முகேஸ்வரன் முதலிடமும், தமிழ் கதை எழுதுதல் போட்டியில் தவஸ்ரீ இரண்டாம் இடமும், எட்டாம் வகுப்பு இலக்கிய மன்ற போட்டிகளில் கதை மற்றும் வசனம் எழுதுதலில் யோகேஷ் என்ற மாணவரும் மூன்றாம் இடமும், நடிப்பு என்ற பிரிவில் லத்திகா மூன்றாம் இடமும், ஒளிப்பதிவு யோகேஷ் என்ற மாணவர் முதலிடமும், கவிதை எழுதுதலில் ஸ்வேதா என்ற மாணவி முதலிடமும், ஆங்கில பேச்சுப் போட்டியில் ஜாஸ்மின் என்ற மாணவி இரண்டாம் இடமும் வெற்றி பெற்றுள்ளனர். போட்டியில் முதலிடம் பெரும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வ உ சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகள் வ உ சிதம்பரனார் முக கவசம் அணிந்து பிறந்தநாளை கொண்டாடி மகிழ்தனர். நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின் வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாயஹில்டா, செல்விஜாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.